ராணுவப் படையை மறுசீரமைக்கும் யேமன் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் முகாம்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
ராணுவப் படையை மறுசீரமைக்கவும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் மகன் உள்ளிட்ட தனது எதிர்ப்பாளர்கள் தலைமையிலான படையைக் குறைக்கவும் யேமன் அதிபர் அப்ராபு மன்சூர் ஹதி கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மேலும், குடியரசு படையைச் சேர்ந்த 3 பிரிகேடியர்கள் தலைமையில் அதிபருக்கான பாதுகாப்புப் படையை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மற்ற 2 எதிர்ப்புப் படையைச் சேர்ந்த பிரிகேடியர்களை மத்திய மற்றும் தெற்குப் பகுதிக்கு மாற்ற ஆணையிட்டார்.
அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கில் உள்ள அபியன் மாகாணம் லோடரில் உள்ள ராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியில் இருந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் சனா பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆவர்.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆட்சிக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் பதவி விலகினார். இப்போது புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும் அரசுக்கும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது


















